இன்னொரு முறை பிஜேபிக்கு நாம் வாக்களித்தால் நாடு அதிபர் ஆட்சிக்கு மாறிவிடும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் திருப்புனவாசல், கரூர் மற்றும் ஆவுடையார் கோவில் பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், தேர்தல் பணிக்குழு மாநில தலைவருமாகிய ராஜ கண்ணப்பன் ஆவுடையார் கோவில் பகுதியில் பரப்புரையை மேற்கொண்டார். இறுதியாக அவர் ஆவுடையார்கோவில் கடைவீதியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, நம் இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று மதத்தின் அடிப்படையில் பழகாமல் அனைவரும் சகோதரத்துடன் பழகி வருகிறோம். ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளில் ஆங்காங்கே கலவரங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது, ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை இன்று வரை பிஜிபியால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஏழரை லட்சம் கோடி ஊழல், 8,256 கோடி ஊழல் எலக்ட்ரோல் பாண்டு மூலம் என்று பல்வேறு துறைகளில் பிஜேபி கட்சி ஊழலை செய்து நாட்டை சீரழித்து விட்டது, இந்த கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்தால் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டார்கள்.

பிஜேபிகாரர்கள் வளர்ச்சி என்று பொய்யைச் சொல்லி நாடு சீரழிந்து விட்டது. பத்து ஆண்டுகள் அவர்களுக்கு கொடுத்தது போதும், இனிமேல் நீங்கள் பிஜேபிக்கு வாக்களித்தால் நாடு சுடுகாடாகிவிடும். சீனா, ரஷ்யா, இலங்கையை போல அதிபர் ஆட்சிக்கு இந்தியா மாறிவிடும். மாநிலங்கள் கலைக்கப்பட்டு அவை பெரு நகரங்களாக மாற்றப்படும். இது நமக்கு தேவைதானா, சிறுக சிறுக சேர்த்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் கமிஷனுக்காக விற்கப்பட்டு விட்டது என்று பேசினார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்துறை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.