அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிப்பு

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளது. முன்னதாக அவரை ஏப்ரல் 15ம் தேதியான இன்று வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடைவடைந்ததையடுத்து, காணொலிக் காட்சி மூலம் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி, காவேரி பவேஜா, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை வருகிற 23 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை  டெல்லி உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏப்ரல் 24 ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.