கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி கடையடைப்பு போராட்டம் : வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவிப்பு

மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மக்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த அதிரடியாக வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சுங்கச்சாவடியை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் சார்பில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் கருப்புக்கொடி கட்டி சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் வியாபாரிகள் சங்கம், மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கம், ஆகியோர் உட்பட கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450-க்கு மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைகள் மற்றும் வீடுகள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டி தங்களது எதிர்ப்பை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக போராட்டம் நடத்திய போதும் மத்திய – மாநில அரசுகள் சுங்கச்சாவடியை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.