இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான் : அண்ணாமலை காட்டம்

இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரச்சார மேடைக்கு வருகை தந்தார்.

அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, மத்திய இணை அமைச்சரும் நீலகிரி வேட்பாளருமான எல்.முருகன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சரும் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் பேசும்போது, கோவை மேட்டுப்பாளையம் இருப்பு பாதையை இரட்டை வழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”நாட்டிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான். திமுக எங்களுக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் திமுகவினர் எங்கு வந்து வாக்குக்கு பணம் கொடுத்தாலும், அது கஞ்சா பணம் என்பதை மறந்து விடாதீர்கள். அடுத்த 7 நாட்களுக்கு பாஜகவினர் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் பிரதமர் நரேந்திர மோடி அதே அர்ப்பணிப்போடு நமக்கு 5 ஆண்டுகள் பணியாற்ற முடியும்” என்று தெரிவித்தார்