திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரூர் தொகுதியில் “கை” சின்னத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் இருந்தபடி திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கரூரில் மட்டும் 7 கோடி முறை விடியல் பயண திட்டத்தை பெண்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பெண் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடினர் பெரியார், அண்ணா, கலைஞர். பெண்களுக்கு சம உரிமை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர். பெண்ணுரிமையை காக்க மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு முதல்வர் முதலமைச்சர் மாதம் ரூ.1,000 வழங்குகிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் மிகவும் உன்னதமான திட்டம். தமிழ்நாட்டின் காலை உணவு திட்டம் தெலுங்கானா, கர்நாடகாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் கூட காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டம் உலகம் முழுவதும் விரிவடைந்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். பரப்புரையில் செங்கல்லை காட்டுங்கள் என உதயநிதியிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.