தன்னை கன்னடர் என பெருமையாகக் கூறிக்கொண்ட அண்ணாமலை பெங்களூருவில் போட்டியிடாதது ஏன் : கனிமொழி கேள்வி

”கர்நாடகத்தில் பணியில் இருந்தபோது தன்னை கன்னடர் என பெருமையுடன் கூறிக்கொண்ட அண்ணாமலை பெங்களூருவில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்?” என்று திமுக எம்பி-யான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக துணைப்பொதுச்செயலாளரான கனிமொழி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் கனிமொழி. அவரும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவ்வபோது தொகுதிக்கும் சென்று தனக்காகவும் வாக்குச் சேகரித்து வருகிறார். இந்தநிலையில், இன்று காலை விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் கனிமொழி.

அப்போது பேசிய அவர், “நாட்டுப்பற்று என இந்தி மொழியை திணித்த பிரதமர் மோடிக்கு திடீரென தமிழ் மொழி மீது பற்று வந்துவிட்டது.  தேர்தலுக்குப் பின் ஓய்வில் இருக்கப்போகும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் கற்பிக்க நல்ல ஆசிரியரை நியமிப்போம். தமிழ் படித்தாவது தமிழ்நாட்டின் உணர்வை பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடிகிறதா என பார்ப்போம்” என்றார்.

தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்த கனிமொழி, “கர்நாடகத்தில் பணியில் இருந்தபோது தன்னை கன்னடர் என பெருமையுடன் கூறியவர் அண்ணாமலை. கன்னடர் என்று பெருமையாகக் கூறிய அண்ணாமலை பெங்களூருவில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.