இனியும் பாஜக ஆட்சி தொடர்ந்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடக்காது : அதிர்ச்சியை கிளப்பும் அகிலேஷ் யாதவ்

“மத்தியில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக அரசாங்கம் தொடர்ந்தால் இளைஞர்களுக்கு  திருமணம்கூட நடக்காது” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என பாஜக முடிவு செய்து அதற்கான செயல் திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்த நிலையில், “இனியும் பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் அதிபர் ஆட்சி முறை ஏற்பட்டுவிடும்.  சர்வாதிகாரம் தலைதூக்கி விடும். ஒரே கட்சி ஒரே நாடு என்ற முறை அமல்படுத்தப்படும் ” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்சி வருகின்றன.  எனவே பாஜக அரசை அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழ்நாட்டில் திமுக, கேரளத்தில் இடதுசாரி முன்னணி, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ்,  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்,  பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் என பல்வேறு கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக களத்தில் நிற்கின்றன.

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் உணர வேண்டும் என்றும், பாசிச பாஜக ஆட்சியை மத்தியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை பேசிவருகிறார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், “பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியைத் தொடர்ந்தால் இளைஞர்களுக்கு திருமணம்கூட நடக்காது” என்று எச்சரித்துள்ளார்.

“பாஜக ஆட்சி மேலும் 10 ஆண்டுகள் நீடித்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது சந்தேகம் தான். ஏனென்றால் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமும் பாஜகவிடம் இல்லை. வேலைக்காக காத்திருந்தே இளைஞர்களுக்கு வயதாகிவிட்டது. அதனால் அவர்களுக்கு திருமணம் நடப்பது கூட சந்தேகம்தான். எதற்கும் பயனில்லாத பாஜக அரசை அகற்றுவதே இதற்கு தீர்வு” என அவர் கூறியுள்ளார்.