தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல், வெள்ள நிவராண நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 6,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களை சீர் செய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் வழங்கும்படி தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இந்த கோரிக்கைகள் மிக முக்கிய பிரச்சினையாக அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மிக்ஜாம் நிதியான 285 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியான 397 கோடி ரூபாயில் 160 கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. இதனிடையே கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக 3,454 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.