சிறுபான்மையினர் மாட்டிறைச்சி உண்ணும் உரிமையை வழங்க காங்கிரஸ் விரும்புகிறது : யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

சிறுபான்மையினருக்கு மாட்டிறைச்சி உண்ணும் உரிமையை வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என்றும், இது பசு வதையை அனுமதிப்பதற்கு சமம் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பரமேஷ்வர் லால் சைனிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பிலாரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்த வெட்கமற்றவர்கள் (காங்கிரஸ்) பசு இறைச்சியை உண்ணும் உரிமையை வழங்குவதாக உறுதியளிக்கிறார்கள். அதேசமயம் நமது வேதங்கள் பசுவை தாய் என்று அழைக்கின்றன.

கசாப்புக் கடைக்காரர்களின் கைகளில் மாடுகளைக் கொடுக்க விரும்புகிறார்கள். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? காங்கிரஸ் பெண்களின் செல்வத்தை கைப்பற்றி அதை ரோஹிங்கியாக்கள், வங்கதேச ஊடுருவல்காரர்களிடையே விநியோகிக்க விரும்புகிறது.

மக்களின் சொத்துகளை கணக்கெடுப்பதாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அவற்றில் இரண்டு அறைகளை அவர்கள் (காங்கிரஸ்) எடுத்துக்கொள்வார்கள். இது மட்டுமின்றி, பெண்களின் நகைகளை கையகப்படுத்துவோம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது. இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2004 முதல் 2014 வரை அவர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர்.

கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயன்றனர். ராகுலும், பிரியங்காவும் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, ராமர் இருக்கிறாரா என கேள்வி எழுப்பினர். ஆனால் தெய்வம் என்பது அனைவருக்கும் உரியது. இவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என்றார்.