சென்னையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்க முயற்சி நாகை மீனவர் கைது

சென்னையில் 1 கோடி‌ ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்ற நாகை மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 800 கிராம் எடையுள்ள எச்சம்‌ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சிலம்பரசன் (33). இவர் நாகப்பட்டினத்தில் சொந்தமாக பைபர் படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிலம்பரசன் நாகப்பட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தது அவரது வலையில் திமிங்கல எச்சம் சிக்கியது .

இதனையடுத்து சிலம்பரசன் அந்த எச்சத்தை விற்பனை செய்வதற்காக கடந்த 7-ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது அத்தை முத்துலட்சுமி வீட்டில் தங்கி திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. நேற்று இரவு எண்ணூர் நேதாஜி பஸ் ஸ்டாப் அருகே சிலம்பரசன் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த எண்ணூர் ரோந்து போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட 800 கிராம் திமிங்கல எச்சம் அவரிடம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதன் சந்தை மதிப்பு 1 கோடி‌ ரூபாய் ஆகும். இதனையடுத்து சிலம்பரசனை எண்ணூர் போலீஸார் கைது செய்து திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.