வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கோடை வெயிலின் கொடுமையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனரான சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து விடுவதால் வனவிலங்குகள் – மனித மோதல்கள் ஏற்படுவதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. எனவே வன விலங்குகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் மையங்களை ஏற்படுத்த வேண்டும். தெரு விலங்குகளுக்கு தண்ணீர், உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என சிவா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தனது மனுவை பரிசீலித்து, கோடைக்காலத்தில் தெரு விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதற்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.