மாணிக்கம் தாக்கூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு : தேர்தல் ஆணையம்

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது மாணிக்கம் தாக்கூர் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததாக மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சசிகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், பாஜக நிர்வாகி தாக்கல் செய்த மனுவில், “மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரும், அவரது முகவர்களும், அவரது கூட்டணி கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தனர்.

பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாக்கூரின் ஆதரவாளர்கள் மீது விருதுநகர் மற்றும் மதுரை காவல்நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்கு பதியப்பட்ட பின்பும் கூட வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மனுமீது எடுக்கப்படவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாக்கூரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சபீக் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனு ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது. ஒருவாரத்தில் அந்த மனு மீது முடிவெடுக்கப்படும்.” என்று தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பாஜக நிர்வாகி தொடர்ந்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.