ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள் : காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு

குஜராத் காங்கிரஸ் பிரமுகரான பிரதாப் துதாத், “ராகுல் காந்தியின் ஆண்மையை சோதிக்க, பாஜகவினர் தங்கள் தாய், மகள்களை அவருடன் தூங்குவதற்கு அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ஜுனாகத் விசாவ்தாரில் உள்ள பாஜக அலுவலகத்தின் திறப்பு விழாவின் போது அக்கட்சி எம்எல்ஏ பூபத் பயானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமைத்துவம் குறித்து விமர்சித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ராகுல் காந்தியைப் போன்ற ஒரு ஆண்மையற்றவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது” என குறிப்பிட்டார். பூபத் பயானியின் இந்த பேச்சு அம்மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்தவராவார்.

இந்நிலையில், ராகுல் காந்தி மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் துதாத் நேற்று பேசுகையில், “ராகுல் காந்தியின் ஆண்மையை அளவிட உங்கள் தாய், மகள்களை அவருடன் தூங்குவதற்கு அனுப்புங்கள்” என பேசியுள்ளார்.

பிரதாப் துதாத் பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநில பாஜக ஊடக பிரிவு இணைத் தலைவர் ஜூபின் அஷாரா எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “பிரதாப் துதாத்தின் கூற்று எவ்வளவு அருவெறுப்பானது. பிரதாப் துதாத் அல்ல, காங்கிரஸின் டிஎன்ஏ தான் அப்படிப் பேசுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.