பணமோசடி வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தாமதம் : உச்ச நீதிமன்றத்தை நாடிய ஹேமந்த் சோரன்

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஹேமந்த் சோரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது கபில் சிபல், “கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய மனு உயர் நீதின்றத்தில் சிக்கியுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிரான மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது என்றாலும், இதுவரை தீர்ப்பினை வழங்கவில்லை. இந்த வழக்கை அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவரது கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரன் பிப்ரவரி 2-ம் தேதி ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றார்.

சுரங்கங்களின் உரிமையை சட்டவிரோதமாக மாற்றும் மிகப் பெரிய மோசடி ஜார்க்கண்டில் நடப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. போலி ஆவணங்கள் மூலம் போலியான விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களை காட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்த பெரிய அளவிலான குற்ற நடவடிக்கை நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டினை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.