மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் : நிர்மலா தேவி வழக்கில் நீதிமன்றம் கேள்வி

தங்களை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகாரை, விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ஜூன் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என அருப்புக்கோட்டை கல்லூரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை, பெண் டிஐஜி ஒருவர் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவிகள், விசாகா குழுவில் புகார் அளித்துள்ளார்களா என விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். அதனை பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாகா குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது சம்பந்தமாக விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கல்லூரி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, ”ஆறு ஆண்டுகள் கடந்தும் மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் என ஜூன் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்” என்று கல்லூரி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.