வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு : ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு 95 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூலை மாதத்தில் வெளியான இந்த அறிவிப்பை தொடர்ந்து நவம்பர் மாதம் 19-ம் தேதி, முதல் நிலை தேர்வு நடைபெற்றது. குரூப்-1 முதன்மை தேர்வுகள் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. முதன்மை தேர்வு முடிவுகள் மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் குரூப் தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூலை 13-ம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு ஏப்ரல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.