கோவை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது : ஆஸ்திரேலிய மருத்துவர் வழக்கு

“கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது” என்று, ஆஸ்திரேலிய மருத்துவரான சுதந்திர கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்தவர் சுதந்திர கண்ணன். ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் இவர், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை வந்தார். ஆனால், வாக்குச் சாவடிக்குப் போன பிறகுதான் தெரிந்திருக்கிறது அவரது பெயர் வாக்காளர் பட்டிய்லில் இல்லை என்று. இதையடுத்து வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார் கண்ணன். இப்படி கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தனக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது குறித்து மருத்துவர் சுதந்திர கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்தேன். வாக்களர் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவி பெயரும் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் வாக்களித்த நிலையில், இந்த முறை எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே முகவரியில் வசிக்கும் எங்களது மகள் பெயர் பட்டியலில் உள்ளது. இப்படி எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று சுதந்திர கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.