சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

தற்போது விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்தது. அதன்படி 2021ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 210 பக்க குற்றப்பத்திரிக்கை கடந்தாண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடந்தது. விசாரணைக்கு விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆஜராகவில்லை. இதனால் வழக்கை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.