தந்தையை இழந்த பின் தாயை பராமரித்து வந்த மாணவி கோகிலா 4 பாடங்களில் 100-க்கு 100

தந்தையை இழந்தும், சுயநினைவை இழந்த தாயை பராமரித்து வந்த மாணவி ஒருவர் 4 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி – ராதா தம்பதியரின் 2-வது மகள் கோகிலா. கன்னியாகுமரி அருகிலுள்ள கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இவரது தந்தையை இழந்த நிலையில், விபத்தினால் பாதித்து தாயும் சுயநினைவை இழந்தார். பெற்றோருக்கு நேர்ந்த சம்பவங்களால் கொஞ்சமும் மனம் தளராமல் தனது சகோதரி மற்றும் பெரியம்மாவின் உதவியால் கஷ்டப்பட்டு படித்தார்.

இந்நிலையில், இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் நான்கு பாடங்களில் சதம் அடித்து 600-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது, மதுரை சோலையழகுபுரம் பகுதியிலுள்ள பெரியம்மா வீட்டில் வசிக்கிறார்.

மாணவி கோகிலா கூறுகையில், ”கடந்த 2012-ம் ஆண்டு ஒரு விபத்தில் தனது தாய் ராதா சுயநினைவை இழந்தார். தந்தை பராமரிப்பில் படித்தேன். 2019-ல் உடல் நலக் கோளாறு காரணமாக தந்தையும் உயிரிழந்தார். பொருளாதார நெருக்கடியால் தனது சகோதரி சுகுமாரி மதுரை முனிச்சாலை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து கொண்டு குடும்பச் செலவுக்கு பணம் அனுப்பினார்.

சுயநினைவை இழந்த தனது தாயும் பராமரித்துக் கொண்டு பிளஸ் 2 படித்து முடித்தேன். தேர்வு முடிவில் தமிழ், ஆங்கிலம் தவிர, பிரதான 4 பாடங்களில் சதம் அடித்து இருப்பது பெருமை. சகோதரி சுகுமாரி எனது படிப்பிற்காக அவரது படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார். பொருளாதார உதவி கிடைத்தால் அவரும் நிச்சயமாக படிப்பார்.

வறுமையின் பிடியில் இருக்கக் கூடிய சூழலில் நர்ஸ் வேலை பார்க்கும் எனது பெரியம்மா மாரியம்மாள் அரவணைத்துள்ளார். பேங்கிங் படிக்க ஆர்வம். மதுரையில் கல்லூரி படிப்பை படிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக மதுரைக்கு அம்மாவை அழைத்துக்கொண்டு வர உள்ளேன். எனது கல்லூரி படிப்புக்கும் சகோதரி மேல்படிப்புக்கும் அரசு, தனியார் அமைப்புகள் உதவி கரம் நீட்டவேண்டும்” என கோரினார்.