திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு : 40 தொகுதிகளிலும் கருணாஸ் பிரசாரம்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு  நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அது தவிர மேலும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மனிதநேய ஜனநாயக கட்சி முதலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பிறகு அதன் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த வகையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் தற்போது திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.  “திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளோம்.  தமிழ்நாட்டில் அடிமை, துரோகக் கட்சியான அதிமுகவை எதிர்க்க கிடைத்துள்ள சரியான வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம்.

சமூக நீதிக்காகவே இந்தத் தேர்தலில் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.  இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற இலக்குடன் திமுகவை ஆதரிக்கிறோம்” என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.