திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது : சேலம் பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

தமிழகத்தில் தனக்கு கிடைத்து வரும் ஆதரவால் திமுகவிற்கு தூக்கம் தொலைந்து விட்டதாகவும், தமிழகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு குறித்து தான் நாடு முழுவதும் பேச்சாக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டில் மட்டும் 6வது முறையாக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அமுமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஐஜேகே கட்சியின் பச்சைமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற படையின் தலைவர் ஜான்பாண்டியன், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழில் பேசி பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சை தொடங்கினார்.

அவர் பேசும்போது, ”தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்து விட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றி தான் நாடு முழுவதும் பேச்சாக உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்கு தான், என மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்திருக்க வேண்டும். திமுகவும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றார்.

மேலும், “தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக எப்படி எல்லாம் இழிவு செய்தது? அதிலிருந்து திமுகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காமராஜர் போல் மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி வருகிறோம். ஜி.கே.மூப்பனார் பிரதமராக வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி வளர விடவில்லை. இந்தியா கூட்டணியின் நோக்கம் மும்பை பொதுக்கூட்டத்தில் தெரிந்துவிட்டது. பெண்கள் இழிவாக பேசியிருக்கிறார்கள்.

இந்து மதத்தை விமர்சிக்கும் இந்தியா கூட்டணி மற்ற மதத்தையோ, மற்ற மதத்தினரையோ விமர்சிப்பதில்லை. உலகின் மிகவும் மூத்த மொழி தமிழ். இந்தியாவுக்கு தமிழ் மொழியால் பெருமை. தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வேன். இது எனது வாக்குறுதி என்றார்.

நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கி வருகிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. சேலத்தின் உருக்குத் தொழில் பலன் அடையும் வகையில் 6,000 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். சேலம் பகுதியில் ரயில்வே கட்டமைப்புக்காக 260 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக படுகொலை செய்யப்பட்ட பாஜகவினரை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நா தழுதழுக்க பேசினார். குறிப்பாக ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது தொண்டர்களை எழுந்து நின்று ஒரு நிமிடம் ’ரமேஷ் புகழ் வாழ்க’ என்று கூறுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்று இருந்த தொண்டர்களும் எழுந்து நின்று ரமேஷ் புகழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.