காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் : செல்வப் பெருந்தகை அறிவிப்பு

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆர்வமுள்ளோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப்படிவத்தை இன்று முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை 20.03.2024 புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் பாராளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.30,000, பாராளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ.15,000, அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10,000, மகளிருக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.