கோடை வெயிலில் மனித உயிர்கள் பறிபோவதை அரசு வேடிக்கை பார்க்கிறது : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

“கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோவதை தமிழக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு, உத்தப்பநாயக்கணூர், செல்லம்பட்டி, சேடபட்டி, எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “இந்த வெப்ப சலன காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் உள்ளன. அதை விடுத்துவிட்டு வெறும் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கவில்லை.

மக்கள் மீது அக்கறை இல்லாமல் முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அறிக்கை மூலமே தெரிகிறது. தேர்தல் காலத்தில் பேரிடர் காலம் எனும் போது, பருவநிலை மாற்றத்தின் போது விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளலாம். வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பெற்று., மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெயில் தாக்கம் இல்லாத நேரங்களில் தொழிலாளர்களுக்கு பணியை கொடுக்கலாம்.

விலை மதிக்க முடியாத உயிர்கள் இந்த வெப்ப சலனத்தில் பறி போகிறது. அதை வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு. மனிதர்கள் மட்டுமல்லாது விவசாய நிலங்களும் கருகி வருகிறது. அவற்றிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மக்களை பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெளியேவே வர வேண்டாம் என சொல்லும் முதல்வர் அதற்கான நிவாரணங்களை வழங்க வேண்டும்” என்றார்.