“தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன” – பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன. அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜக தனது பெரும்பான்மையைத் பயன்படுத்தி நாட்டை வலுப்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை தன்னுடைய குடும்பத்தைப் பலப்படுத்தவே பயன்படுத்தியது. ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும்கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன, அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருகின்றனர். பலர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே EVM (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) மீது குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் ஊழல் வழக்குகளில் 3 சதவீதம் மட்டுமே அரசியலில் தொடர்புடையவர்கள். மீதமுள்ள 97 சதவீத வழக்குகள் அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்புடையவை. ஆனால் இது குறித்தும் தவறாக விமர்சிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஊழலை ஒழிப்பதே முதன்மை குறிக்கோளாக உள்ளது.

உலகில் ஐந்தாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்ற உண்மையை மக்கள் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியிருக்கிறோம். அதோடு, 370-வது சட்டப்பிரிவை நீக்கியது போன்ற பல்வேறு விஷயங்களை நாட்டின் வளர்ச்சிக்காக செய்துள்ளோம். பாஜக அதன் உத்தரவாதங்களை நிறைவேற்றியிருக்கிறது என்பதற்கு எங்களின் 10 ஆண்டுகால ஆட்சியே ஆதாரம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.