டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி : பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநில நிதியமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை இந்த வழக்கில் மேலும் பலரை கைது செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதே கோரிக்கையோடு உச்ச நீதிமன்ற கதவுகளை கேஜ்ரிவால் தரப்பு தட்டி உள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி மாநில நிதியமைச்சர் அதிஷி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”டெல்லி மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாகவே குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான பல்வேறு தகவல்களும் எங்களுக்கு கிடைத்து வருகிறது. கடந்த பல மாதங்களாக டெல்லியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படாததிலிருந்து இது உறுதியாகிறது” என்றார்.

மேலும், ”நான் பாஜகவை எச்சரிக்கிறேன். இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. டெல்லி மாநில மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் தனி பெரும்பான்மையை வழங்கி இருக்கிறார்கள். அதற்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும்.” என்றார்.