திருச்சி வடமாநில ஊழியர் சடலமாக மீட்பு போலீஸார் விசாரணை.

திருச்சியில் பிரபல இனிப்புக் கடையின் குடோனில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாநகரில் பி.ஜி.நாயுடு என்ற பிரபல இனிப்புக்கடை செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்த கடை திருச்சியில் மட்டுமின்றில் அருகாமை நகரங்களிலும் வசிக்கும் மக்களிடையேயும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த கடைக்கு சொந்தமான தயாரிப்பு கூடம் மற்றும் குடோன் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த குடோனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர ராய் (39) என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாஸ்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடை மற்றும் தயாரிப்புக் கூடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் சிலர் மது அருந்த சென்றுள்ளனர். ஆனால், தேவேந்திர ராய் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று இரவு தேவேந்திர ராய் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் பாலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தேவேந்திர ராயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அதிகளவு மது அருந்தியதால், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.