ஹரியாணாவில் பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஆளுநருக்கு துஷ்யந்த் சவுதாலா கடிதம்

ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெற்ற நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையில் சவுதாலா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு துஷ்யந்த் சவுதாலா எழுதியுள்ள கடிதத்தில், “சமீபத்தில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவினை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றதாலும், ராஜினாமா செய்ததாலும் ஆளும் அரசு பேரவையில் சிறுபான்மை அடைந்த அரசாக மாறியுள்ளது. எனவே, அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் துஷ்யந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹரியாணாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாஜக அரசு தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளது. காரணம் ஒரு பாஜக எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளனர். மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த தங்களின் ஆதரவினை திரும்பப் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் அளித்துள்ளனர். இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதனை ஜெஜெபி ஆதரிக்கும் என்று தெளிவாக கூறியுள்ளது.

இது பற்றி நாங்கள் ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். தற்போது காங்கிரஸ் கட்சி இதற்கான (நம்பிக்கை வாக்கெடுப்பு) நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்று பார்த்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடவும், அப்படி பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடவும், ஆளுநருக்கு அதிகாரம் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை கடந்த செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர் சிங்ஹுடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.

ஹரியாணா சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டது. எனினும், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்குப் பதிலாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனால், லால் கட்டரின் தொகுதியான கர்னால் தொகுதி காலியானது. இதேபோல் ரானியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சவுதாலா, ஆளும் பாஜக அரசை ஆதரித்து பாஜகவில் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், தற்போது சட்டசபையின் பெரும்பான்மை பலம் 45 என்ற நிலையில் பாஜக வசம் 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் தான் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் பாஜகவின் பலம் 43 ஆக குறைந்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தற்போது 3 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் பட்சத்தில் காங்கிரஸின் பலம் 43 ஆக உயரும். இரண்டு எம்எல்ஏக்கள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கின்றனர். ஹரியாணாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.