பாஜகவுக்கு எதிராக திரும்பும் சந்தேஷ்காலி பெண்கள்  -திரிணமூல் நிர்வாகிகள் மீதான பலாத்காரப் புகாரை திரும்பப் பெற்றனர்

மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் வன்கொடுமை புகாரில் திருப்பம் அரங்கேறியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகாரை சந்தேஷ்காலி பெண் ஒருவர் திரும்பப்பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சார மேடைகளில் மேற்கு வங்கத்துக்கு அப்பாலும் சந்தேஷ்காலி விவகாரம் சர்ச்சையானது. திரிணமூல் கட்சினருக்கு எதிராக சந்தேஷ்காலியை சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு புகார்களை தொடுத்தனர்.

இதனிடையே புகார் தொடுத்த 3 பெண்களில் ஒருவர், காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்பப்பெற்றுள்ளார். மேலும் பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமூல் கட்சியினருக்கு எதிராக புகார் கொடுக்க வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட நலத்திட்டங்களில் ஆதாயம் தருவதாக கூறி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஷஷி பஞ்சா, ’தங்கள் பொய்யான கற்பழிப்பு குற்றச்சாட்டை திரும்பப் பெறச் சென்ற பெண்கள், உள்ளூர் பாஜக தலைவர்களால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்பட்டதாகவும்’ குற்றம் சாட்டினார்.மேலும் தங்கள் கட்சி சந்தேஷ்காலி நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கிறது என்றும் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சகரிகா கோஷ் கூறுகையில், “மோசடியான பலாத்கார புகார்களை பதிவு செய்ய வற்புறுத்தப்பட்ட விதம் குறித்து உண்மையை கூறிய சந்தேஷ்காலி பெண்களை பாஜக மிரட்டுவது அருவருப்பானது” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திரிணமூல் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவரே தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கைகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணமூல் கட்சி முடிவு செய்துள்ளது. பாஜகவோ மேற்படி ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ, ஜோடிக்கப்பட்டது என குற்றம்சாட்டுகிறது.