வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கர் மற்றும் விளம்பரம் செய்வதை தடை செய்யும் நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த கோரிய வழக்கில் அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் போலீஸ், ஊடகம், நீதித்துறை போன்ற ஸ்டிக்கர்கள், மத சின்னம், கட்சித் தலைவர்கள் படங்கள், கட்சிச் சின்னங்கள் ஒட்டத் தடை விதிக்கவும், பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களிலும் வணிக விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என்று விளக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, இது குறித்து தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.