அக்கா வீட்டில் 182 கிராம் தங்கம் 52 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்த தங்கை மிளகாய் பொடி தூவியும் சிக்கினார்

திருவிழாவிற்கு சென்ற அக்கா வீட்டில் 182 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 லட்ச ரூபாய் ரொக்கத்தைத் திருடிய தங்கையை போலீஸார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லாகரேயைச் சேர்ந்தவர் உமா. பல இடங்களில் உமா கடன் வாங்கியிருந்தார். அந்த கடன்களை அவரால் கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உமாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனால் தனது கணவரிடம், கடனை அடைக்க அவர் பணம் கேட்டுள்ளார். ஆனால், உமா கேட்ட பணத்தை அவர் கொடுக்கவில்லை. இதனால், கடனை எப்படி கட்டுவது, கடன்காரர்களின் தொல்லையில் இருந்து எப்படி மீள்வது என்று உமா யோசித்தார். அப்போது கொள்ளையில் ஈடுபட்டு கடனை அடைப்பது என அவர் முடிவுக்கு வந்தார். அதற்கு பெங்களூருவில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் கொள்ளையை அரங்கேற்றுவது என உமா முடிவு செய்தார். கடந்த 24-ம் தேதி அன்று உமாவின் சகோதரி சௌடேஸ்வரி, குடும்பத்தினருடன் கிராமத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டுச்சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டுச் சென்றார். தனது சகோதரி கிராமத்திற்குச் சென்றதை அறிந்த உமா, அன்று பெங்களூரு வந்துள்ளார். இரவு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அவர்கள் அசந்த நேரத்தில், தனது சகோதரி வீட்டிற்கு உமா சென்றார்.

போலி சாவி மூலம் வீட்டைத் திறந்து வீட்டின் பீரோவில் இருந்த 182 கிராம் தங்கம், 52 லட்ச ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்தார். அத்துடன் கைரேகை எதுவும் கிடைக்கக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவி விட்டு சமார்த்தியமாக தப்பிச் சென்றார். கிராமத்திற்குச் சென்றிருந்த சௌடேஸ்வரி, வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்டிருந்த வீட்டில் பீரோவில் இருந்த தங்கநகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அத்துடன் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதைக் கண்டு இது திட்டமிட்ட கொள்ளை என்பதை உணர்ந்தார். இதுகுறித்து கெங்கேரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீஸார், தனிப்படை அமைத்து சௌடேஸ்வரி வீட்டில் கொள்ளையடித்தவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில், உமா வந்து சென்ற விவகாரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது.அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, சௌடேஸ்வரி வீட்டில் பணம், நகையை உமா தான் கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்ததுடன் நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவரை 6 காவலில் எடுத்து இதே போல எங்கும் சம்பவத்தில் ஈடுபட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடனை அடைக்க அக்கா வீட்டிலேயே பணம், நகை ஆகியவற்றை தங்கை கொள்ளையடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.