டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் குண்டு வைத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் உள்ள பள்ளிகளில் குண்டு வைத்திருப்பதாக சுமார் 200 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி பள்ளிகளுக்கு வந்த மிரட்டல் புரளி எனவும், ரஷ்யாவில் இருந்து இந்த இ-மெயில் அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது. அதுபோல் அகமதாபாத் பள்ளிகளுக்கு வந்த மிரட்டலும் போலியா என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வெடிகுண்டு புரளியால் பெற்றோர் கலக்கம் அடைந்து பள்ளிகளுக்கு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.