ஆவடியில் கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை

ஆவடி அருகே சித்த மருத்துவரும், அவரது மனைவியையும் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரைச் சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்த மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (60) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. சிவத்தின் மகனும் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வயதான அவரது தாய், தந்தை மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சித்த மருத்துவர் சிவம் நாயர், அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து பார்த்த போது சிவம் நாயரும், அவரது மனைவி பிரசன்னாவும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டைக்கொலை கொள்ளைக்காக நடத்தப்பட்டதா, வேறு காரணத்திற்காக நடத்தப்பட்டதா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. செல்போன் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக வசித்து வந்த கணவன், மனைவியை குறிவைத்து கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.