ராஜபாளையத்தில் முகநூலில் பழகி திருமணத்துக்கு மறுத்த பெண் மீது தீ வைப்பு : தப்பி ஓடிய இளைஞரை தேடும் போலீஸ்

ராஜபாளையத்தை சேர்ந்த பெண்ணுடன் ‘பேஃஸ்புக்’ மூலம் பழகிய மதுரையைச் சேர்ந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, தப்பி ஓடினார். தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (25) அங்குள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் செல்போனில் பேசி காதலித்து வந்த நிலையில், குணசேகர் அடிக்கடி ராஜபாளையம் வந்து பாண்டிசெல்வியை பார்த்துச் சென்றுள்ளார். கடந்த 20 தினங்களுக்கு முன் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், பாண்டிச் செல்வி குணசேகருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் குணசேகரன் ராஜபாளையம் வந்து, பாண்டிசெல்வியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் குணசேகர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை பாண்டிசெல்வி தனது அக்கா மற்றும் அவரது மகளுடன் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணையை, பாண்டிசெல்வி மீது ஊற்றி தீ வைத்தார். இதை கண்ட பாண்டிச்செல்வியின் அக்கா, சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பாண்டிசெல்வி மீது பற்றிய தீயை அணைத்தனர்.

பாண்டிசெல்வி 22 சதவீத தீக்காயத்துடனும், அவரது அக்கா லேசான தீக்காயத்துடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குணசேகரை தேடி வருகின்றனர். திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண் மீது இளைஞர் தீவைத்து எரிக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ வைத்துவிட்டு குணசேகர் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.