விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் வாக்குகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் : அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் விவிபாட் இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் ஒன்றாக எண்ண வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை அளித்தனர். இந்த விளக்கங்கள் ஏற்புடையதாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது.

அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனினும் தேர்தல் முடிந்து 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் வைத்து பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர். அதே சமயம் 5 சதவீதம் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார்க்கோடு வைக்க முடியுமா என்பதை ஆராய ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை நீதிமன்றம் உறுதி செய்வதாகவும், தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக அனைத்து விசாரணைகளையும் நடத்தி உள்ளதாகவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.