பிஹார் மாநிலம் பாட்னா ஓட்டல் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு : 20 பேர் மீட்பு

பிஹார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஷ்ரா கூறுகையில், “நெருக்கடி மிகுந்த இடத்தில் அமைந்துள்ள அந்த ஓட்டல் கட்டிடத்தில் இருந்து 20-க்கும் அதிகமானோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. காயம்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத் துறை டிஐஜி மிருத்யுஞ்சய் குமார் சவுத்ரி அந்த இடத்துக்கு விரைந்து சென்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காலை 11 மணிக்கு தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.