“இன்னும் சில நாட்களில் மோடி மேடையில் கண்ணீர் விடுவார்” – ராகுல் காந்தி பேச்சு

“சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடுவார்” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார்.

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரப் பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடக்கூடும்.

கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அதே அளவு செல்வத்தை 22 பேருக்கு வழங்கியுள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தையும், பணவீக்கத்தையும் நீக்கி காங்கிரஸ் கட்சி உங்களுக்கு பங்களிப்பை வழங்கும்.

கோடீஸ்வரர்களுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அவ்வளவு பணத்தை நாங்கள் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுப்போம். கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். இதன்மூலம் இங்குள்ள மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள். நரேந்திர மோடி அரசு சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கும்” என்றார் ராகுல் காந்தி.