லாரி – கார் நேருக்கு நேர் மோதி விபத்து : திருமண விழாவில் பங்கேற்று திரும்பிய 9 பேர் பலி

ராஜஸ்தானில் திருமணக் குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தங்கிரி பகுதியில் நேற்று திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் வேன் ஒன்றில் சென்றனர். திருமணத்தை முடித்துவிட்டு அவர்கள் அனைவரும் அதே வேனில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலபர் அருகே வந்தபோது இவர்கள் சென்ற வேன் மீது அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேன் அடையாளம் தெரியாத அளவிற்கு நொறுங்கியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு 9 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த அனைவருமே 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.