தேர்தல் முடிந்தும் பின்பற்றும் நடத்தை விதிகளால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு : மாணிக்கம் தாகூர் கடிதம்

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய மாதிரி நடத்தைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய மாதிரி நடத்தைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ” வாக்கு எண்ணிக்கை 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற உள்ளதால், ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து அமல்படுத்துவது வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையற்ற சிரமங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்துகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து, குடிமக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் அது ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து, தனியார் குடிமக்கள் மீதான கட்டுப்பாடுகளை கணிசமாக தளர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.