கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது

கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீஸார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பேருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும், நடத்துனராக செந்தில்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.

பேருந்து கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே வந்த போது போக்குவரத்து நெரிசலால் நின்றது. அப்போது, 10 பேர் கொண்ட கும்பல், அந்தப் பேருந்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்து எடுக்க வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை அருகில் உள்ளவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள், அங்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களும் வெளிநோயாளியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸார், கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் சுதர்சன் (24), சரவணன் மகன் உதயகுமார் (25), பாலாஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் குமரன் மகன் ஜனார்த்தனன் (20), பாலக்கரையை சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 4 பேரை கைது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.