விருதுநகரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் வைப்பு – 4 அடுக்கு பாதுகாப்பு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இன்று சீல் வைக்கப்பட்டன. துணை ராணுவப் படையினர் உள்பட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 70.32 சதவிகித வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவு முடிந்து அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் வெள்ளைச்சாமி பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன.

இன்று காலை வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. பின்னர், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக அந்தந்த வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகே உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

பின்னர், விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிருமான வீ.ப.ஜெயசீலன், அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்புக் காவல் படை, ஆயுதப்படை போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் உள்பட என 545 பேர் அடங்கிய 4 அடுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உயர் நிலையான அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.