கடப்பா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, கடப்பா மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதி, 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாநிலத்துக்கு வரும் மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இதையடுத்து, ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஷர்மிளாவுடன் அவரது உறவினரும், கடந்த 2019 தேர்தலுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மகளுமான சுனிதா நரெட்டி உடன் சென்றார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, ஒய்.எஸ்.ஷர்மிளா கூறுகையில், “கடப்பா எம்பி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன். கடப்பா மக்கள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, விவேகானந்த ரெட்டி ஆகியோரை மறக்கவில்லை. அவர்களை மனதில் வைத்து இந்த முறை மக்கள் வாக்களிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக இடுபுலுபாயாவில் உள்ள தனது தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்துக்கு சென்று வேட்பு மனுவை வைத்து ஷர்மிளா பிரார்த்தனை செய்தார். கடப்பா மக்களவைத் தொகுதியில், ஷர்மிளா, தனது சகோதரரும் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர்சிபி வேட்பாளரும் உறவினருமான ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டியை எதிர்த்துப் போட்டியிட உள்ளார்.