‘நாட்டில் நியாயமான தேர்தல் நடந்தால் பாஜக-வுக்கு 180 இடங்கள் கூட தேறாது’ -பிரியங்கா காந்தி

’நாட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு 180 இடங்கள் கூட தேறாது’ என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நெருங்கியிருப்பதன் மத்தியில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. உத்தரபிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், சிட்டிங் எம்பி ராகவ் லகன்பால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மஜித் அலி ஆகியோருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் வெற்றி இலக்கு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்ற முழக்கத்தை முற்றிலுமாக நிராகரித்தார். “400 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள். அவர்களென்ன ஜோதிடர்களா? ஒன்று அவர்கள் முன்பே ஏதாவது செய்து வைத்திருப்பின், 400க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவது குறித்து தெளிவாக அறிந்திருப்பார்கள். இல்லையெனில் 400 இடங்கள் கிடைக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேள்விகளால் மடக்கினார்.

இந்த நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்காத வகையில் தேர்தல் நடத்தப்பட்டால், பாஜகவுக்கு 180 இடங்கள்கூட கிடைக்காது என்று என்னால் திடமாக கூற முடியும்” என்றும் அவர் தெரிவித்தார். எதிர்கட்சியான ’இந்தியா கூட்டணி’க்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று செய்தியாளர்கள் மடக்கியபோது, புன்னகை விலகாத ​​பிரியங்கா ”நானும் ஒரு ஜோதிடர் அல்ல” என்றார். பின்னர் சமாளித்துக்கொண்டவராக, இந்தியா கூட்டணிக்கு நல்ல இடங்கள் கிடைக்கும் என்றார்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், பிரதமர் மோடி மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரியங்கா காந்தி கூறினார். “மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் இந்த வகையான அரசியலை விரும்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், சாமானியர்களில் குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் இல்லை. அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பணவீக்கம் குறையவில்லை. ராம நவமி தினத்தில் அதைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றைப் பற்றி அவர்கள் வாய்திறக்கப்போவதில்லை” என்றும் பிரியங்கா சாடினார்.