பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து : உத்தராகண்ட் அரசு அதிரடி

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமத்தை உத்தராகண்ட் மாநிலத்தின் மருத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரம் பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து, விளம்பரத்தின் வாசகங்களை மாற்ற சொல்லி உத்தரவிட்டிருந்தது. இதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தததை அடுத்து, கடந்த 16-ம் தேதி நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார். மேலும், ”எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறமாட்டேன்” என்றும் ராம்தேவ் உறுதியளித்தார். மேலும், தேசிய செய்தி நாளிதழ்களில் சிறிய அளவில் விளம்பரம் வெளியிட்டு பொது மன்னிப்பும் கோரினார்.

அந்த விளம்பரத்தில், ’நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம்’ என்று கூறியிருந்தார் ராம்தேவ். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், உஙக்ள் தயாரிப்பு பொருட்களின் விளம்பரத்தைப் போல மன்னிப்பு விளம்பரமும் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையாடுத்து முழு பக்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. பொய்யான விளம்பரங்களின் மீது மத்திய அரசும், உத்தராகண்ட் அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்தும், மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.