மீண்டும் வாதிட அனுமதி கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்.17-ல் தீர்ப்பு

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் ஏப்ரல் 17-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது மார்ச் 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி அவரது தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழங்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவை கிடைத்தபிறகு, அதன் அடிப்படையில் இந்த வழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன், வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட ஆவணங்களில் வேறுபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான என்.ரமேஷ், வங்கி ஆவணங்கள் குறித்து மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் வாதிட அனுமதி கோரும் இந்த மனுவின் மீது வரும் ஏப்ரல் 17-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 32-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.