ராகுல் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு, நடிகை ரம்யா ரோடு ஷோ : குமாரசாமிக்கு எதிராக களமாடும் காங்கிரஸ்

மாண்டியா தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிராக வாக்குகளைத் திரட்ட காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. இதற்காக மாண்டியா முன்னாள் எம்.பி நடிகை ரம்யா மூலம் ரோடு ஷோ நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் களம் அனலடிக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியை அமைத்துள்ள ராகுல் காந்தி, பாஜகவை வீழ்த்த அனைத்து வியூகங்களையும் வகுத்து வருகிறார். அதற்காக கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்.

பாஜக கூட்டணி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தலைவருமான (ஜேடிஎஸ்) குமாரசாமியை தோற்கடிப்பதற்கான அனைத்து வேலைகளிலும் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ‘ஸ்டார்’ சந்துரு (வெங்கடரமண கவுடா) வெற்றிக்காக காங்கிரஸ் தலைமை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக மாண்டியா தொகுதி பெண் வாக்காளர்களைக் கவர பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் வகுத்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாட்டை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. ஏப்ரல் 16 அல்லது 17-ம் தேதி ராகுல் காந்தி அதற்காக மாண்டியா வருகிறார். இன்று அதற்கான தேதி உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மாண்டியாவின் முன்னாள் எம்.பியும், பிரபல நடிகையுமான ரம்யா, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கணிகா ரவிக்குமார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, மாண்டியாவில் நடிகை ரம்யா மூலம் ரோடு ஷோ நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கெனவே நான்கு சுற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். இதனுடன் தேசிய தலைவர்களை அழைத்து வரவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்படி ராகுல் காந்தி பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாட்டில் ஒரு லட்சம் பேரை திரட்ட மாண்டியா பொறுப்பு அமைச்சர் என்.செலுவராயசாமி ஏற்பாடு செய்து வருகிறார்.