முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார் : அரசியல் தலைவர்கள், திரை உலகினர் இரங்கல்

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எம்.வீ. என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஆவார். எம்ஜிஆர் 1953ம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பனை நியமித்திருந்தார். இதன் பின்னர் 1963ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற பெயரில் ஆர்.எம்.வீரப்பன் சினிமாப்பட நிறுவனம் ஒன்றை துவங்கினார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்த அவர், எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக் கட்சியை துவங்குவதற்கு பின்னணியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். 1984ம் ஆண்டு எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத போது, ஆர்.எம்.வீரப்பன் தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டபோது, அதிகப்படியாக 98 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதலமைச்சராக பதவியில் அமர வைக்க ஆர்.எம்.வீரப்பனின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

பின்னர் போட்டி அதிமுக ஒன்றான போது ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நல்லிணக்கம் காரணமாக அவர் அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு முறை சட்டப்பேரவைக்கும், மூன்று முறை சட்ட மேலவைக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை ஆர்.எம்.வீரப்பன் வகித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் இருந்தபடியும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் மூச்சு திணறல் காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.