‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கு பொருத்தமானது’ – அசாம் முதல்வர்  தாக்கு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா விமர்சித்துள்ளார்.

அசாம் மாநிலம், ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பேரணிக்கு இடையில் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கானது இல்லை. பாகிஸ்தானுக்கானது போலத் தெரிகிறது. சமூகத்தை பிளவு படுத்தி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே காங்கிரஸின் மனநிலையாக உள்ளது.

பாஜக ஒரு புரட்சி வடிவத்தை முன்னெடுத்துள்ளது. அது இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றும். மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். துப்ரி தொகுதியில் இருந்து நேர்மறையான தகவல்கள் வந்திருக்கின்றன” என்றார்.

அசாம் முதல்வரின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மாநில காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பிதப்ரதா போரா கூறுகையில், “சர்மா போன்ற சந்தர்ப்பவாதிகளால் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை புரிந்து கொள்ள முடியாது. ஹிமந்த பிஸ்வா சர்மா பல ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தும் கட்சியின் முக்கிய கொள்கையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால் தான் அவர் பாஜகவுக்குச் சென்றார். அக்கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்ட காங்கிரஸ் கட்சியை அவதூறு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிகை அனைத்து பிரிவு மக்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது” என்றார்.