ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், “மக்களவைத் தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இதில் ரயில்வே தொழிலாளர்க்ள் சேர்க்கப்படவில்லை. அவர்களையும் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கேரளாவில் ரயில்வே துறையினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆகியோர் வாக்கு செலுத்துவதற்காக விடுப்பு எடுக்க முடியாது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரயில்வே துறை ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே, அதேபோல, மக்களவை தேர்தலிலும் தபால் வாக்களிக்க அனிமதிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும், தபால் வாக்கு பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க மார்ச் 25-ம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது” என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ரயில்வே துறை தரப்பில்தான் தவறு எனக்கூறிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தெற்கு ரயில்வேயும், தேர்தல் ஆணையமும் வரும் ஏப்.10-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.