உத்தரப்பிரதேச மதரஸா கல்விச் சட்டத்தை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைகாலத் தடை

உத்தரப் பிரதேச மதரஸா கல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 மதரஸா ஆசிரியர்களையும் மாநிலக் கல்வி முறைக்கு மாற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு கூறுகையில், “மதரஸா வாரியத்தின் நோக்கம் இயல்பிலேயே ஒழுங்குமுறையை கொண்டுள்ளது. வாரியத்தை நிறுவுவது மதச்சார்பின்மையை மீறுவதாகும் என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பார்வை சரியானது இல்லை. மதரஸா சட்டம் 2024-ன் விதிகளை உயர் நீதிமன்றம் தவறாக கருதியுள்ளது. ஏனென்றால் அது மதப்போதனையை வழங்கவில்லை. மேலும் சட்டத்தின் நோக்கம் மற்றும் தன்மையை இயல்பாகவே ஒழுங்குபடுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர் மதரஸாக்கள் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி விசாரித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்தனர். அதில், ‘‘உத்தரப் பிரதேச மதரஸா கல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இந்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

மதரஸா கல்விச் சட்டம் 2024 என்பது அரபி, உருது, பார்சி, இஸ்லாமிய கல்வி, தத்துவம் மற்றும் உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியத்தால் குறிப்பிடப்படும் சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.