தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது : கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்

தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் கலந்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டதாக கூறினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை படுவீழ்ச்சி அடைந்த நேரத்திலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறிய அவர், பெரும் முதலாளிகளுக்காக பாஜக ஆட்சி செய்து வருவதாக சாடினார். தேர்தல் பத்திர விவகாரத்தில் அதிக நிதியை வாங்கி குவித்த பாஜக அதில் இருந்து மக்களை திசை திருப்ப அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளதாக பினராயி விஜயன் கூறினார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசு, சங்பரிவார் அமைப்பிற்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் போட்டி அரசை மத்திய அரசு நடத்தி ஜனநாயகத்தை கேலி செய்து வருவதாக பினராயி விஜயன் சாடினார்.